Monday, March 14, 2011

வீரபாண்டிய கட்டபொம்மன்

அழகிய வீரபாண்டியபுரம் (இன்றைய ஒட்டப்பிடாரம்) என்ற நகரை ஆண்டு வந்த ஜெகவீரபாண்டியன் என்ற மன்னனுக்கு பொம்மு என்ற ஒரு அமைச்சர் இருந்தார். இவர் ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர். அவர் தெலுங்கில் கெட்டிபொம்மு என்றழைக்கப்பட்டார். கெட்டிபொம்மு எனும் பெயர் நாளடைவில் கட்டபொம்மன் என்று மாறி அவர் ஆதி கட்டபொம்மன் என்றழைக்கப்பட்டார்.

ஜெகவீரபாண்டியன் வாரிசில்லாமல் இறக்கவே ஆதி கட்டபொம்மன் மன்னனானார். இவரே திருநெல்வேலியிலிருந்து வடகிழக்கில் 18 கிலோமீட்டர் தொலைவில் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைக் கட்டினார். ஆதி கட்டபொம்மனின் பரம்பரையில் வந்த ஜெகவீர கட்டபொம்மனுக்கும் அவரது மனைவி ஆறுமுகத்தம்மைக்கும் கி.பி. 1760ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி கருத்தையா என்றழைக்கப்பட்ட வீரபாண்டியன் பிறந்தான். சிவத்தையா என்றழைக்கப்பட்ட தாளவாய் குமாரசாமி மற்றும் ஊமைத்துரை என்றழைக்கப்பட்ட துரைசிங்கம் ஆகியோர் அவனது தம்பிகளாவர்.

வீரபாண்டியன் பாஞ்சாலங்குறிச்சியின் 47வது மன்னனாக 1790ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி முடிசூட்டப்பட்டுப் பின்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் என்றழைக்கப்பட்டான். வெள்ளையர்களை எதிர்த்து கி.பி. 1798 முதல் கி.பி. 1801 வரை பாஞ்சாலங்குறிச்சி போரிட்டது. இதுவே பின்னர் 1857ஆம் ஆண்டு நடந்த இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் உருவானதற்குத் தூண்டுகோலாக அமைந்தது.

இத்தகைய புகழ்பெற்ற வீரபாண்டிய கட்டபொம்மன் கதை நடிகர் திலகம் சிவாஜி கணேசனைக் கதாநாயகனாகக் கொண்டு பி.ஆர். பந்துலு அவர்களின் இயக்கத்தில் 1959ஆம் ஆண்டு திரைப்படமாக வெளிவந்தது. 1960ஆம் ஆண்டு கெய்ரோவில் நடந்த ஆப்பிரிக்க-ஆசியத் திரைப்பட விழாவில் இப்படம் சிவாஜி கணேசன் அவர்களுக்குத் தலைசிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றுத்தந்தது.

கட்டபொம்மனாக சிவாஜி கணேசன், ஊமைத்துரையாக ஓ.ஏ.கே. தேவர், கட்டபொம்மனின் மனைவி ஜெக்கம்மாவாகப் புகழ்பெற்ற பாடகி எஸ். வரலக்ஷ்மி, கட்டபொம்மனின் தளபதி வெள்ளையத் தேவனாகக் காதல் மன்னன் ஜெமினி கணேசன், அவரது காதலி வெள்ளையம்மாவாக நாட்டியப் பேரொளி பத்மினி, கட்டபொம்மனின் ஒற்றனாக பிரபல நகைச்சுவை நடிகர் கூஜா கருணாநிதி, வெள்ளையரின் ஒற்றனாகக் குலதெய்வம் ராஜகோபால், கட்டபொம்மனை வெள்ளையரிடம் காட்டிக் கொடுத்த எட்டப்பனாக பிரபல நகைச்சுவை நடிகர் வி.கே. ராமசாமி, வெள்ளைக்காரத் துரை பானர்மேனாக ஜாவர் சீதாராமன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஜி. ராமநாதன் இசையமைப்பில் திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன், டி.எம். சௌந்தரராஜன், பி.பி. ஸ்ரீனிவாஸ், எஸ். வரலக்ஷ்மி, பி. சுசீலா, ஜமுனாராணி, டி.வி. ரத்னம், ஏ.பி. கோமளா, சுந்தரம் ஆகியோர் பின்னணி பாடியுள்ளனர்.

"கறந்த பாலையும் காகம் குடியாது கட்டபொம்மு துரை பேரு சொன்னா" என்ற வரிகளுடன் கட்டபொம்மனின் புகழினை எடுத்துரைக்கும் கோரஸ் பாடல், தன் நாட்டில் கொள்ளையர்கள் மக்களைக் கொள்ளையடிப்பதைக் கேட்டு அவர்களைப் பிடிக்க கூஜா கருணாநிதியுடன் மாறுவேடமணிந்து சிவாஜி கணேசன் மாட்டு வண்டியில் சென்றுகொண்டே பாடும், "மாட்டு வண்டி பூட்டிகிட்டு, மாப்பிள்ளையைக் கூட்டிக் கிட்டு" எனும் பாடல், பேபி காஞ்சனா நடனமாட அதற்கு எஸ். வரலக்ஷ்மி பாடும், "சிங்காரக்கண்ணே உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி" என்ற பாடல், ஜெக்கம்மாவும் வெள்ளையம்மாவும் பிற பெண்களுடன் சேர்ந்து பாடும், "டக்கு டக்கு டக்குனு அடிக்கடி துடிக்கும்" என்ற விடுகதைப் பாடல், அதை மறைந்திருந்து வேடிக்கை பார்க்கும் கட்டபொம்மனும் ஊமைத்துரையும் அவர்களிடம் மாட்டிக் கொண்டு அவதிப்படும் காட்சி, கூஜா கருணாநிதியும் குலதெய்வம் ராஜகோபாலும் தங்கள் காதலியருடன் பாடும் "ஆத்துக்குள்ளே ஊத்து வெட்டி, ஆசையாகத் தண்ணி மொண்டு" என்ற பாடல், பத்மினி தன் தோழியருடன் சேர்ந்து வெள்ளையம்மாவின் காளையைப் பற்றிப் பாடும் "அஞ்சாத சிங்கம் என் காளை, இது பஞ்சாப் பறக்க விடும் ஆளை" என்ற பாடல், ஜெமினி கணேசனும் பத்மினியும் பாடும் காதல் ரசம் நிறைந்த "இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே" எனும் பாடல், அப்பாடல் முடிவில் அவ்விருவரையும் பாம்பு ஒன்று தீண்ட வர, அப்பாம்பை அப்பொழுது அங்கு வரும் சிவாஜி கணேசன் தன் வாளால் வெட்டும் காட்சி, முருகன் கோவிலில் தன் மனைவியுடனும் சுற்றத்தாருடனும் வழிபடும் கட்டபொம்மன் பாடும் "வெற்றி வடிவேலனே, சக்தியுமை பாலனே, வீரம் விளைத்த குகனே" எனும் பாடல், வெள்ளையத் தேவன் போருக்குப் புறப்படுகையில் வெள்ளையம்மா அவனைப் போருக்குப் போக வேண்டாம் என்று கெஞ்சும் "போகாதே போகாதே என் கணவா, பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்" எனும் பாடல், வெள்ளையருடன் போரிட்டு வெள்ளையத் தேவன் மடிந்ததும் ஒலிக்கும் "ஜெக்கம்மா, வேறில்லை திக்கம்மா" எனும் பாடல் ஆகியவை எத்துணை முறை பார்த்தாலும் கேட்டாலும் இனிப்பவை.

ராமலிங்க விலாசம் எனும் மாளிகையில் வெள்ளைக்காரக் கலெக்டர் ஜாக்சன் துரையை கட்டபொம்மன் சந்திக்கும் காட்சியும், அப்பொழுது அவர்கள் பேசும் வசனங்களும் மிகவும் சுவையானவை.

ஜாக்ஸன்: நீர் தான் வீரபாண்டியக் கட்டபொம்மனோ?

கட்டபொம்மன்: நீர் தான் ஜாக்ஸன் துரை என்பவரோ?

ஜாக்ஸன்: ஏது, வெகுதூரம் வந்து விட்டீர்?

கட்டபொம்மன்: நட்புறவு நாடியதாக அறிந்தேன், அதை விரும்பியே நானும் வந்தேன்.

ஜாக்சன்: நட்பு வேண்டும், ஆனால் அதற்கேற்ற நடத்தையில்லை உன்னிடம்.

கட்டபொம்மன்: கற்றுக்கொடுக்கும் இனம் தமிழினம், நீர் கற்றுக்கொடுக்க முயற்சிப்பது அறிவீனம்.

ஜாக்சன்: இறுமாப்பு இன்னும் அடங்கவில்லை

கட்டபொம்மன்: அது என் உடன் பிறந்தது, அடங்காது, உரக்க உரக்க மேலெழும்.

ஜாக்ஸன்: உன் மீது குற்றம் சுமத்துகிறேன்

கட்டபொம்மன்: என்னவென்று?

ஜாக்ஸன்: எடுத்துரைத்தால் கணக்கிலடங்காது

கட்டபொம்மன்: எண்ணிக்கை தெரியாத குற்றம்

ஜாக்ஸன்: எனக்கா எண்ணிக்கை தெரியாது, அகம் பிடித்தவனே, கூறுகிறேன் கேள், உன் நிலத்தில் விளையும் விளைச்சலுக்குக் கிஸ்தி கொடுக்கவில்லை, எங்கள் பேரரசுக்குக் கீழரசாக இருக்கத் திரைப்பணம் செலுத்தவில்லை, நெடுநாளாக வரிப்பணம் வந்து சேரவில்லை, இந்தப் பாக்கிக்கெல்லாம் இன்னும் வட்டியும் கூடக் கட்டவில்லை.

கட்டபொம்மன்: கிஸ்தி, திரை, வரி, வட்டி, வேடிக்கை! வானம் பொழிகிறது, பூமி விளைகிறது, உனக்கு ஏன் கொடுப்பது கிஸ்தி? எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக்கண்டாயா? நாற்று நட்டாயா? களை பறித்தாயா? கழனி வாழ் உழவருக்குக் கஞ்சிக்கலயம் சுமந்தாயா? அங்கு கொஞ்சி விளையாடும் எம் குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துப் பணிபுரிந்தாயா? அல்லது நீ மாமனா? மச்சானா? மானங்கெட்டவனே, யாரைக் கேட்கிறாய் வரி? எதற்குக் கேட்கிறாய் திரை? போரடித்து நெற்குவிக்கும் மேலைநாட்டுழவர் கூட்டம் பரங்கியர் உடல்களையும் போரடித்து, தலைகளை நெற்கதிர்களாகக் குவித்து விடும் ஜாக்கிரதை.

இந்த வசனங்களைக் கேட்டு, திரும்பப் பேசி மகிழாத தமிழர்கள் அனேகமாக இல்லை. இன்றும் பல குழந்தைகள் இவ்வசனத்தைப் பேசிக்காட்டி, பெரியவர்களின் பாராட்டைப் பெறுவதில் இன்பம் காண்கின்றனர்.

போரில் தோல்வியுற்றபின் ஊமைத்துரையும் மற்றவர்களும் தப்பி ஓடிய நிலையில் வெள்ளைக்கார துரை பானர்மேன் முன்னிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் விசாரிக்கப்படும் போது வரும் வசனங்களும் குறிப்பிடத்தக்கவை.

பானர்மேன்: இரும்புத்தலையன் என்று எனக்குப் பெயர். என்னிடமே இறுமாப்பா?

கட்டபொம்மன்: உருக்க வேண்டிய பொருள், அதனிடம் இரக்கம் காட்டிப் பேசியது தவறுதான்.

பானர்மேன்: எரிக்கும் சூரியன் இருக்கிறதே, அது கூட எங்களைக் கேட்டுத்தான் எழும், விழும்.

கட்டபொம்மன்: அந்தக் கதையெல்லாம் இங்கு விடாதே அப்பனே. சூரியனே வேண்டாமென்று ஒரு ஆண் கூட அல்ல, ஒரு பெண் கூறிய கதை இங்கு ஏராளமாக உள்ளது, வேறு ஏதேனுமிருந்தால் கூறு

பானர்மேன்: ஏனைய பாளையக்காரர்கள் எல்லாரும் பணிந்து விட்டார்கள், பலனடைகிறார்கள், நீ ஒருவன் மட்டும் பணியாதது உனக்கு ஒரு லாபமா?

கட்டபொம்மன்: ஏனைய பாளையக்காரர்கள் எல்லோரும் பணிந்து நான் ஒருவன் பணியாதது உனக்கு ஒரு நஷ்டமா?

பானர்மேன்: இவன் பேசத்தெரிந்தவன்

கட்டபொம்மன்: ஆம், பேசத்தெரிந்தவன், வெறும் பேச்சு மட்டுமல்ல, வல்லவன், வாள் வீசத் தெரிந்தவன், காதல், மானம் என்ற கட்டுக்கோப்பில் வளர்ந்தவன்

பானர்மேன்: நீ இதுவரை செய்த குற்றங்களுக்கு சமாதானம் ஏதும் கூறாமல் மேலும் மேலும் குற்றங்களை வளர்த்துக்கொண்டே போகிறாய். இது நல்லதல்ல. இறுதியாக உனக்கு ஒரு வாய்ப்பளிக்கிறேன், மன்னிப்புக் கேட்டுக் கொள்.

கட்டபொம்மன்: என்ன சொன்னாய்? மன்னிப்பா? என் தாய் கேட்டிருக்க வேண்டுமிதை. தள்ளாத வயதிலும் பொல்லாத புலியெனப் பாய்ந்திருப்பாள். என் தம்பி கேட்டிருக்க வேண்டுமிதை, இந்நேரம் உன் பரங்கித்தலை உன் சீதளச் சீமையை நோக்கிப் பறந்திருக்கும். என் தமிழ்ப் புலவன் இதைக் கேட்டிருக்க வேண்டும், அறம் பாடியே உன்னை அழித்திருப்பான். ஆனால் இங்கோ, நாய்களும், நரிகளும், நயவஞ்சகப் பூனைகளும் நிரம்பி இருக்கின்றன.

பானர்மேன்: என்ன? எங்களை நாய் என்றா சொன்னாய்?

எட்டப்பன்: துரையவர்களே, நாய் ஒன்று தான் நன்றியுள்ள பிராணி, அதைத்தான் கூறுகிறான் இவன்.

பானர்மேன்: அதைச்சொல்ல இவன் யார்?

எட்டப்பன்: அது தானே, அடக்கியாளும் உங்களைச் சொல்ல அடிபட்ட இவனுக்கு என்ன அருகதை இருக்கிறது.

கட்டபொம்மன்: அடே எட்டப்பா, வாழ நினைத்தாய், வல்லவனை அழித்தாய், இனி நீ வாழ்ந்து கொள். ஆனால் அன்னியன் உன்னைப் போற்ற வேண்டும், அது உனக்கு இனிக்க வேண்டும் என்று மட்டும் எண்ணாதே. நானும் நீயும் ஒரே மண்ணில் பிறந்தவர்கள். ஆனால் இவனோ, நேற்று வந்தான், இன்றிருப்பான், நாளை போவான் என்ற எல்லை இலக்கணத்துக்குட்பட்டவன். உனக்கும், என்னோடு சிங்கங்களாய்ப் பிறந்து இன்று குரங்குகளாய்க் கூனிக் குறுகி நிற்கும் மானங்கெட்ட மடையர்களுக்கும் கூறுகிறேன். கூறுவதென்ன சீ, காரி உமிழ்கிறேன் தூ.

பானர்மேன்: போதும் நிறுத்து, யாரங்கே இவனை இங்கிருக்கும் புளியமரத்தில் தூக்கிலிடுங்கள்.

கட்டபொம்மன்: துணிந்தவனுக்குத் தூக்கு மேடை பஞ்சு மெத்தை. தம்பி, அஞ்சாத சிங்கமே, இந்தக் கடைசி நேரத்தில் உன்னைக் காணத்துடிக்கிறேன்.

இந்த வசனங்களும் மிகவும் பிரபலமானவை. இன்றும் கட்டபொம்மன் என்றால் நமக்கு நினைவில் வருவது சிவாஜி அவர்களின் உருவமே. பாத்திரத்திற்கு உயிர்கொடுக்கும் அந்த அதீதக் கலைஞனுக்கு இறைவன் சாகாவரம் அளித்திருக்கக் கூடாதா?

No comments:

Post a Comment

Lorem

Lorem

About This Blog