Tuesday, July 26, 2011

காதலிக்க நேரமில்லை

வெற்றிப்பட இயக்குனர் சி.வி. ஸ்ரீதரின் இயக்கத்தில் ரவிச்சந்திரன், முத்துராமன், டி.எஸ். பாலையா, நாகேஷ், காஞ்சனா, ராஜஸ்ரீ, வி.எஸ். ராகவன், குமாரி சச்சு மற்றும் பலர் திறம்பட நடித்து 1964ஆம் ஆண்டு வெளிவந்த முழுநீள நகைச்சுவைப் படம் காதலிக்க நேரமில்லை.

தொடக்கத்திலிருந்து முடிவு வரை ரசிகர்களின் கவனத்தை முழுமையாக ஈர்த்து அவர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தது இப்படம். எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இனிமையானவை. இத்திரைப்படம் கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள ஆளியார் அணை, அதைச் சேர்ந்த விருந்தினர் மாளிகை, பூங்காக்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் கண்ணுக்கினிய குளு குளு கலரில்
படமாக்கப் பட்டுள்ளது.

சென்னையில் வாழும் ஒரு தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியரின் மகனான அசோக் (ரவிச்சந்திரன் - இப்படத்தில் தான் இவர் அறிமுகமானார்). கோவை ஜில்லாவிலுள்ள சின்னமலை எஸ்டேட்டில் மேனேஜர் வேலை கிடைத்து ஒரு ஹைதர் அலி காலத்து ஓட்டைக் காரை விலைக்கு வாங்கிக்கொண்டு சின்னமலை எஸ்டேட்டில் செட்டில் ஆகிறார்.

எஸ்டேட் முதலாளி விஸ்வநாதன் (டி.எஸ். பாலையா) அவர்களுக்கு செல்லப்பா (நாகேஷ்) எனும் ஒரு மகன், காஞ்சனா (காஞ்சனா), நிர்மலா (ராஜஸ்ரீ) எனும் இரு மகள்கள். அசோக்கின் நண்பன் வாசு (முத்துராமன்). வாசுவின் தந்தை சிதம்பரம் (வி.எஸ். ராகவன்) ஒரு செல்வந்தர். பாலையாவின் எஸ்டேட் அஸிஸ்டண்ட் மேனேஜரின் மகள் மீனா (சச்சு).

முத்துராமனும் காஞ்சனாவும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள்.

இவர்களிருவரும் கதையின் ஆரம்பத்தில் பாடி ஆடுவதாக அமைந்த கே.ஜே. ஜேசுதாஸும் பி. சுசீலாவும் பாடும் "என்ன பார்வை உந்தன் பார்வை" எனும் பாடல் இடம் பெறுகிறது.

நாகேஷ் திரைப்படம் தயாரிக்கும் ஆர்வத்தில் "ஓஹோ புரொடக்ஷன்ஸ்" எனும் பெயர் வைத்துக்கொண்டு தன் தந்தையிடம் படமெடுக்கப் பணம் கேட்டு நச்சரித்துக் கொண்டிருக்கிறார். ஒரு நாள் உலாவப் போகும் வழியில் சச்சுவைப் பார்த்ததும் அவரைத் தன் படத்துக்குக் கதாநாயகியாகத் தேர்வு செய்து 101 ரூபாய் அட்வான்ஸும் கொடுக்கிறார்.

ரவிச்சந்திரனுக்கும் ராஜஸ்ரீக்கும் இடையே சந்தர்ப்பவசமாக மோதல் உருவாகி அதனால் பாலையா அவரை வேலையை விட்டு நீக்கி விடுகிறார். பின்னர் ரவிச்சந்திரன் பாலையாவின் வீட்டிற்கெதிரே ஒரு சிறு கூடாரம் (tent) அமைத்து அதிலிருந்துகொண்டு ஒரு "பாண்ட்" வாத்தியக் கோஷ்டியை வருவித்து அவர்களுடன் சேர்ந்து "மாடி மேலே மாடி கட்டி கோடி கோடி சேர்த்து வைத்த சீமானே.. விஸ்வநாதன், வேலை வேணும்" என்ற பி.பி. ஸ்ரீனிவஸின் பாடலைப் பாடி ஆடும் பொழுது ராஜஸ்ரீ பால்கனியிலிருந்து ஒரு வாளியை அவரது தலையில் போட, மிகப்பெரிய காயம் பட்டது போல் நடித்து ராஜஸ்ரீயின் காதலைப் பெறுகிறார். இந்தப் பாடலுக்கு நடனம் மிக அற்புதமாக இருக்கும்.

பாலையா தன் பெண்களைக் கல்யாணம் செய்து கொடுக்கும் இடம் தன்னைவிட செல்வச் செழிப்புள்ள இடமாக இருக்க வேண்டும் எனும் பிடிவாத குணமுள்ளவர். தன் காதலை வெற்றி பெறச் செய்ய ரவிச்சந்திரன் தன் நண்பனின் உதவியை நாடுகிறார். முத்துராமன் நண்பனுக்கு உதவுவதற்காகத் தன் தந்தையிடம் தான் வியாபார விஷயமாகக் கோவை செல்ல விரும்புவதாகக் கூறித் தன் தந்தையின் பெரிய காரை எடுத்துக் கொண்டு கிழவன் வேஷம் போட்டுக் கொண்டு சின்னமலை எஸ்டேட் சென்று பாலையாவைச் சந்தித்து தான் ஒரு கப்பல் கம்பெனியின் முதலாளி என்றும் ரவிச்சந்திரன் தன் மகன் என்றும் கூறுகிறார். பாலையா அதை உண்மை என்று நம்பி முத்துராமனைத் தன் பங்களாவில் சில தினங்கள் தங்கும்படி வேண்டுகிறார்.

முத்துராமனும் அவ்வாறே தங்கியிருக்கும் பொழுது நாகேஷ் முத்துராமனிடம் தன் திரைப்படத்திற்குப் பண உதவி செய்யும்படிக் கேட்கிறார். அப்பொழுது நாகேஷும் குமாரி சச்சுவும் கிராமபோனில் இசைக்கும் எல்.ஆர். ஈஸ்வரியும் ஏ.எல். ராகவனும் இணைந்து பாடிய "மலரென்ற முகமொன்று சிரிக்கட்டும், மனமென்ற கருவண்டு பறக்கட்டும்" எனும் பாடலுக்கு நடனமாட அதை முத்துராமன் ரசிக்கும் காட்சி மிகவும் அருமை.

இந்நிலையில் வி.எஸ். ராகவன் திடீரென்று சின்னமலைக்கருகில் ஏதோ எஸ்டேட் விலைக்கு வருவதாகக் கேள்விப்பட்டு சின்னமலை வருகிறார். எதேச்சையாக அவர் தன் பால்ய சிநேகிதரான பாலையாவை சந்திக்கிறார்.

அவரை வீட்டுக்குள் அழைத்துச் சென்று தன் பெண்களின் திருமணம் சம்பந்தமாகக் கூறும்பொழுது அவர் பெண் காஞ்சனாவைத் தன் மகனுக்குத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறுகிறார். கிழவன் வேஷத்திலிருக்கும் முத்துராமனை வி.எஸ். ராகவனுக்கு அறிமுகம் செய்கிறார் பாலையா. முத்துராமனின் கார் தனது கார் என்று கண்டுகொள்ளும் தந்தை வி.எஸ். ராகவனிடம் முத்துராமன் அக்காரைத் தான் ஒரு புரோக்கரிடம் விலை கொடுத்து வாங்கியதாகக் கூறி சமாளிக்கிறார்.

முத்துராமன், ரவிச்சந்திரன், காஞ்சனா, ராஜஸ்ரீ ஆகிய நால்வரும் ஒரு நாள் "பிக்னிக்" செல்கின்றனர். அப்பொழுது முத்துராமன், சீர்காழி கோவிந்தராஜன் பாடிய "காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை" என்ற பாடலைப் பாடிக் காஞ்சனாவைக் கலாட்டா செய்து, முடிவில் கிழவன் வேஷத்தைக் கலைத்துத் தான் அவரது காதலன் என்பதை வெளிப்படுத்துகிறார்.

இதற்கிடையில் சென்னை திரும்பும் வி.எஸ். ராகவன் ரவிச்சந்திரனைப் பற்றிய உண்மை தெரிந்து பாலையாவிடம் சொல்கிறார். பாலையா கோபமடைந்து போலீஸில் ரவிச்சந்திரன், முத்துராமன் இருவரின் மேலும் மோசடி செய்ததாகப் புகார் கொடுத்து விடுகிறார். இதன் விளைவாக, முத்துராமனையும் ரவிச்சந்திரனையும் போலீஸார் கைது செய்து லாக்கப்பில் வைக்கின்றனர். காஞ்சனாவின் மூலம் கிழவன் வேடமிட்டது தன் மகன் என்றறிந்த வி.எஸ். ராகவன் புகாரை வாபஸ் வாங்க ஏற்பாடு செய்கிறார்.

இந்நிலையில் சச்சுவின் தந்தை நாகேஷிடம், "படம் எடுக்கிறேன் படம் எடுக்கிறேன்னு என் பொண்ணைக் கூட்டிக்கிட்டு சுத்தினியே, என் பொண்ணை இது வரைக்கும் ஒரு ஃபோட்டோ எடுத்தியாய்யா?" என்று கேட்டு, இன்னும் ஒரு வாரத்திற்குள் படம் எடுக்க வேண்டும், இல்லையென்றால் சச்சுவைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்த, நாகேஷின் யோசனைப்படி அவர் பாலையாவை வழி மறித்து, தன் பெண்ணுக்கு நாகேஷைக் கல்யாணம் செய்ய வற்புறுத்துகிறார். இறுதியில் மூன்று ஜோடிகளுக்கும் திருமணம் இனிதே நடக்கிறது.

இப்படத்தில் நகைச்சுவைக் காட்சிகள் ஏராளம். எல்லாவற்றையும் எடுத்துரைக்க வேண்டுமென்றால் படத்தின் கதை வசனம் அனைத்தையும் சொல்ல வேண்டும். அப்படி ஒரு பிணைப்பை இப்படத்தில் அபாரமாக அமைத்துள்ளார் இயக்குனர் ஸ்ரீதர்.

வழக்கமாக சீரியஸான ரோல்களில் நடிக்கும் முத்துராமன் இப்படத்தில் தன் நகைச்சுவை நடிப்பால் அசத்தியிருக்கும் விதத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. படத்தைப் பார்த்துத்தான் ரசிக்க இயலும். நாகேஷ் சச்சுவை ஒப்பந்தம் செய்யும் பொழுது சச்சு படத்தயாரிப்பு பற்றிக் கேட்கையில், "தயாரிப்பு, டைரக்ஷன் எல்லாமே நான் தான். எல்லாம் ரெடியாயிருக்கு. ஆனா அந்தக் கதை.." என்று சொல்லிவிட்டுத் தன் படத்திற்குக் கதையை மரங்களிடையே தேடுவது மிகவும் ஸ்வாரஸ்யமான விதத்தில் வெளிப்படுத்துகிறது.

நாகேஷ், பாலையா, காஞ்சனா, ராஜஸ்ரீ நால்வரும் டைனிங் டேபிளில் அமர்ந்து உணவருந்துகையில் நாகேஷ் ஏதோ யோசனையில், ச்..ச்..அய்யோய்யோயையோ.." என இழுக்க, பாலையா "ஏண்டா, வயித்து வலியா?" எனக்கேட்க, ராஜஸ்ரீ "ஏன் அண்ணா, படத்தைப் பத்தி ஏதாவது ப்ளானா?" எனக் கேட்க, "தேர் யூ ஆர், என் படத்தில ஒரு சின்ன சீன்; அப்பன் மகனை வீட்டை விட்டுத் துறத்தறார்" என, "ஆமா, இப்படியே நடந்துக்கிட்டிருந்தா உன் கதையில இல்லடா, நம்ம வீட்டுக்குள்ளே நடக்கத்தான் போகுது" என பாலையா கூற அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் நாகேஷ், "அப்போ வீட்டு வாசலில் வரும் நாய் அவனைப் பார்த்து ஒரு நிமிஷம் அழுதுட்டுப் போகுது, பத்து வருஷத்துக்கு முன்னாலே பிஸ்கட் போட்டிருக்கான். கேமராவில் நாயின் கண்ணைக் காட்டி அப்படியே வானத்தைக் காட்டறேன். சோன்னு மழை, உலகமே அந்தப் பையனுக்காகக் அழற மாதிரி" எனக்கூற காஞ்சனா கிண்டலாக,

"ஆஹா! இந்தச் சின்ன ஐடியாவுக்காகவே உன் படம் நூறு நாள் ஓடும்" என்று சொல்ல, பாலையா இடைமறித்து, "ஆ, ஓடும், ஓடும்.. ஒரே இடத்திலே நிக்கும்" என சொல்ல, நாகேஷ் "ஃபைனான்சியர், பணம் கொடுக்கற ஆளே இப்படிப் பேசினா எப்படி? நீங்க வேணும்னாப் பாருங்கப்பா, என் படம் ஓஹோ ஒஹோன்னு ஓடத்தான் போகுது, பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டப் போகுது" எனக்கூற பாலையா, "ஆமாம், பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டப் போகுது, நான் கோணிப்பையிலே கட்டோ கட்டுனு கட்டப் போறேன், போடா வேலை கெட்டவனே அறைஞ்சேன்னா"
என்பார்.

இரட்டைக்குரலில் பேசி அசத்துவதில் நடிகவேள் எம்.ஆர். ராதாவுக்கு நிகரானவர் பாலையா ஒருவரே. இந்த யுக்தியை இப்படத்திலும் பாலையா கையாண்டுள்ளார். ஒரு கல்யாணத் தரகர் அவர் மகளிருக்கு வரன் பார்ப்பதாகச் சொல்லி, "பையனுக்குப் படிப்பில்லேன்னாலும் பெரிய ரூபா எழுபது எம்பது ரூபா தேருமே" எனும்போது பாலையா அடித்தொண்டையில், "ஓஹோ, பையனுக்குப் படிப்பு வேற இல்லையா" பலே, பலே, அப்போ ஒண்ணு செய்யறியா?" எனக்கூறி விட்டுத் தன் இயல்பான குரலில். "நடையைக் கட்டுய்யா" என்பார்.

நாகேஷ் ரவிச்சந்திரனின் கூடாரத்திற்குச் சென்று "சார், நீங்க எங்கப்பாவுக்கெதிரா இந்தத் தொழிலாளி முதலாளி பிரச்சினையைப் பற்றிப் பேசினீங்களே, சம்திங் வொண்டர்ஃபுல்" எனப் பாராட்டி விட்டுத் தான் படம் எடுக்கப் போவதாகவும் அதற்குக் கதை தான் கிடைக்கவில்லை எனும் போது ரவிச்சந்திரன் ஒரு கதையை "வண்ண மலர் பூத்துக் குலுங்கும் சோலை" எனத்தொடங்க, "ஆஹா! ஆரம்பமே ரொம்ப நல்லா இருக்கு, அப்புறம்" என நாகேஷ் கேட்க, "அங்கே ஒரு கொடி இடையாள் வரா" என ரவிச்சந்திரன் கூற, "கொடியிடையாளா? என் கதாநாயகி அப்படி இல்லையே, சரி, பட்டினி போட்டு சரி பண்ணறேன், அப்புறம்" என்று கேட்க ரவிச்சந்திரன், "அவள் ஒரு நாட்டியக்காரியானதால் அவள் அன்னம் போல மெல்ல மெல்ல நடந்து வரா" எனக்கூற, "நாட்டியக்காரியா, சரிஆக்கறேன், அப்புறம்" என்பார். "அப்புறம் மன்மதன் போல ஒரு வாலிபன் அவ கிட்ட வந்து.." என ரவிச்சந்திரன் இழுக்க, "வந்து, வந்து.." என நாகேஷ் மிக்க ஆவலோடு மேலும் சொல்லக் கேட்க, "அப்புறம் கதை எப்படி எல்லாமோ போகுது.." மிச்சக் கதையை நாளக்கு சொல்றேன்" என்பார் ரவிச்சந்திரன். "கதையே அப்புறம் தான் போகுதா?" என்று கேட்டுவிட்டு நாகேஷ் ரவிச்சந்திரனுக்கு அட்வான்ஸ் தொகையாக ரூ 101 கொடுத்து விட்டுச் செல்கையில், "என்ன கதை? அன்ன நடை, கொடியிடையாள்.. பிச்சுபிட்டான் பிச்சி.." என்று பாராட்டிவிட்டுப் பின் சற்றும் திரும்பி வந்து ரவிச்சந்திரனிடம், "ஏன் சார், இந்தக் கதை மேலே யாரும் கேஸ் போட்டுற மாட்டாங்களே?" என்று கேட்பார். "மாட்டங்கன்னு நினைக்கிறேன் என ரவிச்சந்திரன் சொல்ல நாகேஷ் திரும்பிச் செல்வார்.

ஒரு சீனில் நாகேஷுக்கும் பாலையாவுக்கும் வாக்குவாதம் வர பாலையா, "டேய் உன்னைப் பெத்தேன் பாரு, என் புத்தியை செருப்பாலடிக்கணும், செருப்பாலடிக்கணும்" எனப் புலம்புவார். "உங்களுக்கு மகனாப் பொறந்தேனே, என் புத்தியை எதாலடிக்கிறதாம்?" என்று நாகேஷ் கேட்க, "நான் அடிச்ச செருப்பக் கீழே போடறேன், அதை எடுத்து நீ அடிச்சுக்கோ" என பாலையா கூற, "செருப்பாலடிபட்ட குடும்பம்னு ஊரே பேசும்பா" என்பார்.

இன்னொரு இடத்தில் பாலையா, "ஏண்டா என் மானத்த வாங்கறே?" என்று கேட்க, "வேறென்னத்த வாங்கறது? உங்க கிட்டருந்து பணத்தைத்தான் வாங்க முடியலையே" என்பார். பாலையா ஒரு சமயம் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டு நாகேஷை அழைத்து, "டேய் செல்லப்பா, என்னமோ சினிமா, கினிமான்னு சொல்றியே, அந்தக் கதையைக் கொஞ்சம் சொல்லேன் கேட்போம்" எனக் கூற, பல வினோதமான ஓசைகளுடன், "கும் இருட்டு.." எனத் தொடங்கி நாகேஷ் ஒரு மர்மக் கதையைச் சொல்ல அதைக்கேட்டு பாலையா பயந்து நடுங்கும் காட்சி நகைச்சுவையின் உச்சகட்டமாகும். இக்காட்சி படமாக்கப்படும் பொழுது அதைப் பார்க்க அங்கு வந்திருந்த ஹிந்தி நடிகர் ராஜேந்திரகுமார் அசந்துபோய் இருவரையும் மனதாரப் பாராட்டியதாக நாகேஷ் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் கூறியுள்ளார்.

டைரக்டர் ஸ்ரீதர் இப்படத்தை ஹிந்தியிலும் தயாரித்தார். அதில் ராஜேந்திரகுமார், மெஹ்மூத் மற்றும் பலர் நடித்துள்ளனர். வாழ்க்கையின் அன்றாடப் பிரச்சினைகளை மறந்து மனம் விட்டு சி¡¢க்கவும், சிறிதும் விரசமின்றி இனிய பாடல்களுடன் மனதைத் தொடும் காதல் காட்சிகளையும் கண்டு களிக்க வேண்டுமானால் இப்படத்தை அவசியம் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

Lorem

Lorem

About This Blog